நாக்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி


நாக்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி
x
தினத்தந்தி 9 March 2024 10:18 AM GMT (Updated: 9 March 2024 10:20 AM GMT)

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மேலும் 4 பெண்கள் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ரேஷிம்பாக் பகுதியில் இன்று காலை பா.ஜ.க. கட்சி சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாத்திரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் காரணமாக ஏராளமான மக்கள் அந்த பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 50 வயதான மனு துல்ஷிராம் ராஜ்புத் என்பவர் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தார். அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த கூட்ட நெரிசலில் மேலும் 4 பெண்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் என போலீசார் தெரிவித்தார்.

விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story