காஞ்சீபுரத்தில் 11 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை


காஞ்சீபுரத்தில் 11 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
x
தினத்தந்தி 31 Jan 2024 8:48 AM GMT (Updated: 31 Jan 2024 9:12 AM GMT)

கச்சபேஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம்,

கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் மும்மூர்த்தி கடவுள்களில் ஒருவரான திருமால், ஆமை உருவில் வந்து சிவபெருமானை வணங்கி அருள்பெற்ற திருத்தலமாக காஞ்சீபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கடந்த 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (1-ந்தேதி) (வியாழக்கிழமை) காலை 9.30 மணி முதல் 11 மணி வரை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி காஞ்சீபுரத்தில் நாளை (01.02.2024) 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஞ்சீபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு நாளை (01.02.2024) நடைபெறுவதை முன்னிட்டு இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இக்கோவிலை சுற்றி மிக அருகாமையில் அமைந்துள்ள 1. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி, 2. அரசு கா.மு.சுப்பராய முதலியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 3.அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பெரிய காஞ்சிபுரம், 4.அந்திரசன் பள்ளி, 5.பச்சையப்பன் ஆடவர் மேல்நிலைப்பள்ளி, 6. ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, 7. ராயல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 8. சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி,

9. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி நிறுவனத்திற்கு சொந்தமான மேலும் இரு பள்ளிகள், 10.ஒ.பி.குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 11. அரசு கா.மு.சுப்பராயமுதலியார் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மேற்படி பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது''. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story