கோவில் திருவிழாவை பார்க்க சென்ற 2 இளம்பெண்கள் காதலர்கள் கண்முன்பே விடிய, விடிய கற்பழிப்பு: 4 பேர் கும்பல் வெறிச்செயல்


கோவில் திருவிழாவை பார்க்க சென்ற 2 இளம்பெண்கள் காதலர்கள் கண்முன்பே விடிய, விடிய  கற்பழிப்பு: 4 பேர் கும்பல் வெறிச்செயல்
x

தங்களது கண்முன் காதலிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை பார்த்து காதலர்கள் கதறினர்.

திண்டுக்கல்,

காதலர்கள் கண்முன்பே 2 இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். அவர்களை கடத்திச்சென்று 4 பேர் கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களில் 19 வயதான மூத்த மகளுக்கு திருமணமானது. ஆனால் அவர் கணவரை பிரிந்து தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கும், வேறொரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வருகின்றனர். இதேபோல் அந்த பெண்ணின் 17 வயது தங்கையும் ஒரு வாலிபரை காதலித்து வருகிறார்.

இந்தநிலையில் 2 இளம்பெண்களும், தங்களது காதலர்களுடன் கடந்த 30-ந்தேதி இடையக்கோட்டை அருகே நடந்த கோவில் திருவிழாவை பார்க்க சென்றனர். திருவிழா முடிந்ததும் நள்ளிரவு 1 மணி அளவில் திண்டுக்கல்லுக்கு வந்தனர். அங்கிருந்து தங்களது ஊருக்கு செல்வதற்கு அவர்கள் 4 பேரும் திண்டுக்கல் மின்வாரிய தலைமை அலுவலகம் அருகே பழனி பைபாஸ் சாலையில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிள்களில் 3 வாலிபர்கள் வந்தனர். இளம்பெண்கள், 2 பேருடன் நிற்பதை பார்த்த அந்த வாலிபர்கள் நீங்கள் யார்? எதற்காக இங்கு நிற்கிறீர்கள்? என்று கேட்டனர். அப்போது அவர்கள் தாங்கள் காதலர்கள் என்றும், ஊருக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருக்கிறோம் என்றும் கூறினர்.

அப்போது திடீரென்று தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, தங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் ஏறும்படி அவர்கள் கூறினர். இதனால் உயிருக்கு பயந்த 2 இளம்பெண்கள் மற்றும் அவர்களுடைய காதலர்கள், அந்த வாலிபர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். 4 பேரையும் அந்த வாலிபர்கள் திண்டுக்கல் அருகே தாமரைகுளத்தில் உள்ள மைலாப்பூர் என்ற குளத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு ஏற்கனவே மற்றொரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். இளம்பெண்களுடன் வந்த அவர்களின் காதலர்கள் 2 பேரின் கை, கால்களை கயிற்றால் அவர்கள் கட்டிப்போட்டனர். பின்னர் அந்த வாலிபர்கள் 4 பேரும், அக்காள், தங்கை இருவரையும் ஒருவர் பின் ஒருவராக மாறி, மாறி கற்பழித்தனர். தங்களது கண்முன் காதலிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை பார்த்து காதலர்கள் கதறினர்.

விடிய, விடிய அந்த இளம்பெண்களை தங்களது பாலியல் இச்சைக்கு ஆளாக்கிய அந்த வாலிபர்கள் விடியற்காலை அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களுடன் தப்பி ஓடிவிட்டனர்.

பாதிக்கப்பட்ட 2 இளம்பெண்களும், தங்களுடைய காதலர்களின் கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்தனர். தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்போது இளம்பெண்கள் கூறிய அடையாளத்தை வைத்து, கொடூர செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த சரண்குமார் (வயது 21), முத்தழகுபட்டியை சேர்ந்த வினோத்குமார் (26), முருகபவனத்தை சேர்ந்த சூர்யபிகாஷ் (22), தாமரைகுளத்தை சேர்ந்த சுள்ளான் என்ற பிரசன்னகுமார் ஆகிய 4 பேர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களில் சரண்குமார், வினோத்குமார், சூர்யபிரகாஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பிரசன்னகுமார் தலைமறைவாகி விட்டார்.

பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று இரவு தனியாக இருந்த காதலர்களை பார்த்துள்ளனர். அப்போது இதுகுறித்து பிரசன்னகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது தூண்டுதலின்பேரில், 3 பேரும் இளம்பெண்களை காதலர்களுடன் மைலாப்பூர் குளத்துக்கு கடத்திச்சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே காத்திருந்த பிரசன்னகுமார், அவர்களுடன் சேர்ந்து இளம்பெண்களை கற்பழித்தது தெரியவந்தது.

தலைமறைவாக உள்ள பிரசன்னகுமார் ரவுடியாக வலம் வந்துள்ளார். அவர் மீது திண்டுக்கல், தாடிக்கொம்பு, வேடசந்தூர் போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story