கொல்கத்தாவில் இருந்து வாங்கி வந்து கிண்டியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை - 3 பேர் கைது


கொல்கத்தாவில் இருந்து வாங்கி வந்து கிண்டியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை - 3 பேர் கைது
x

கொல்கத்தாவில் இருந்து வாங்கி வந்து கிண்டியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் பேரில், கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் சிவா, இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் கொண்ட தனிப்படையினர், போதை மாத்திரையை விற்றதாக பரங்கிமலையை சேர்ந்த லோகேஷ் (வயது 27), ஆண்டர்சன் ஜான் (23), ஜெகதீஸ் (20) ஆகியோர் உள்பட 3 பேரை கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் கொல்கத்தாவில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக கல்லூரி மாணவர்களுக்கு விற்றது தெரியவந்தது.

சென்னையில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையாக தனிப்படை போலீசார் கடந்த ஒரு வாரத்தில் நடத்திய அதிரடி சோதனை வேட்டையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த முகமது ஈஷா (26), சைரா அகமதுகான் (30), கோகுல்ராஜ் (22) உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 8½ கிலோ கஞ்சா, 15 கிராம் மெத்தம்பெட்டமைன், 1,200 உடல் வலி நிவாரண மாத்திரைகளும், செல்போன், ரூ.75 ஆயிரத்து 760 பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story