சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 50 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் - வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது


சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 50 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் - வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது
x

ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலை தனிப்படை போலீசார் சோதனையிட்ட போது, 50 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை,

குட்கா, பான்மசாலா போன்ற போதைப்பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. அதே சமயம் பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருவதோடு, அவற்றின் விற்பனையையும் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரும் கும்பல்களை பிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலை தனிப்படை போலீசார் சோதனையிட்ட போது, 50 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக ஒடிசா, மேற்குவங்காளத்தைச் சேர்ந்த 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 பைகளில் குட்கா, பான் மசாலா, போதை சக்லேட்டுகள் ஆகியவை இருந்துள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரெயில்வே காவல் ஆய்வாளர் சசிகலா, எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தொடர்ந்து இது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட 2 நபர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.


Next Story