துருக்கியில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றபோது நடுவானில் குடிபோதையில் பயணி ரகளை


துருக்கியில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றபோது நடுவானில் குடிபோதையில் பயணி ரகளை
x

துருக்கி நாட்டில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் பறந்து சென்ற போது பயணி ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டார். இதனால் அந்த விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கபபட்டது.

சென்னை

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு 318 பயணிகளுடன் விமானம் சென்று கொண்டு இருந்தது. அதில் சிங்கப்பூரைச் சேர்ந்த மெல்னிக் யூரி (வயது 30) என்பவர் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி மெல்னிக் யூரி குடிபோதையில் சக பயணிகளிடம் ரகளை செய்தார். உடனே விமான பணிப்பெண்கள், அவரை அமைதிப்படுத்த முயன்றனர்.

ஆனால் அவர் விமான பணிப்பெண்களையும் தரக்குறைவாக பேசி ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து விமான பணிப்பெண்கள் தலைமை விமானியிடம் புகார் செய்தனர்.

தலைமை விமானி, போதை பயணிக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்தார். ஆனாலும் பயணி தன் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை. இதையடுத்து விமானி, விமானத்தை அவசரமாக ஏதாவது ஒரு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கி, போதை பயணியை விமானத்தில் இருந்து இறக்கிவிட முடிவு செய்தார்.

அப்போது அந்த விமானம் சென்னை வான்வெளியில் பறந்து கொண்டு இருந்தது. இதையடுத்து உடனடியாக விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, அவசர காரணத்துக்காக விமானத்தை, சென்னையில் அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார்.

சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு விமானம், சென்னையில் தரையிறங்க அனுமதித்தனர்.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் துருக்கி விமானம் அவசரமாக தரையிறங்கியது. பின்னர் சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் ஏறி விசாரணை நடத்தினர்.

அப்போது போதையில் இருந்த சிங்கப்பூர் பயணியை விமான கேப்டன் சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அந்த பயணியை விமானத்திலிருந்து கீழே இறக்கி சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அலுவலகத்தில் தங்க வைத்தனர். அதன்பின்பு துருக்கி விமானம் மீதி 317 பயணிகளுடன் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது.

விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட போதை பயணிக்கு இந்திய விசா இல்லாததால் அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியில் அனுப்பாமல் விமான நிலையத்திலேயே தங்க வைத்து போதையை தெளிய வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி பயணிக்கு போதை தெளிந்ததும் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் தனியார் பயணிகள் விமானத்தில் மீண்டும் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தனர்.

குடிபோதையில் பயணி ரகளையில் ஈடுபட்டதால் துருக்கி நாட்டிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் விமானம் அவசரமாக சென்னையில் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story