மின்சாதன பொருள் விற்கும் கடைக்காரரை ஏமாற்றி ரூ.44 லட்சம் மோசடி செய்த வழக்கில் மனைவியுடன் வக்கீல் கைது


மின்சாதன பொருள் விற்கும் கடைக்காரரை ஏமாற்றி ரூ.44 லட்சம் மோசடி செய்த வழக்கில் மனைவியுடன் வக்கீல் கைது
x

மின்சாதன பொருள் விற்கும் கடைக்காரரை ஏமாற்றி ரூ.44 லட்சம் மோசடி செய்த வழக்கில் மனைவியுடன் வக்கீல் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

செங்குன்றத்தை அடுத்த பவானி நகர் என்.எஸ்.சி.போஸ் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 53). இவர் செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலையில் கடந்த 32 வருடங்களாக மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இந்த கடையின் உரிமையாளர் சித்திக் என்பவர் கடையை ராயபுரம் மனோகர் என்பவருக்கு விற்று விட்டார். இந்த நிலையில் மாரியப்பன் தனக்கு சேர வேண்டிய அட்வான்ஸ் தொகை ரூ.82 லட்சத்தை பெறுவதற்காக செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதிநகர் 2-வது தெருவை சேர்ந்த வக்கீல் நந்தகோபால் (60) என்பவரை உதவிக்கு அணுகினார். அப்போது வக்கீல் நந்தகோபால் நடத்திய பேச்சுவார்த்தையில் மாரியப்பனுக்கு கொடுக்க வேண்டிய அட்வான்ஸ் பணம் ரூ.82 லட்சத்தில், ரூ.54 லட்சத்தை தருவதாக மனோகரன் ஒத்துக்கொண்டார்.

அதன் படி தன்னுடைய மனைவி சாந்தி குமாரி என்பவரது வங்கி கணக்கில் பணத்தை போடுமாறும், அதை மாரியப்பனின் கொடுத்து விடுவதாக வக்கீல் நந்தகோபால் ராயபுரம் மனோகரனிடம் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அட்வான்ஸ் தொகை ரூ.54 லட்சத்தை ராயபுரம் மனோகரன், சாந்தி குமாரி வங்கி கணக்கு மாற்றம் செய்தார். இந்த நிலையில் வக்கீல் நந்தகோபால் ரூ.10 லட்சத்தை மட்டும் வங்கியிலிருந்து எடுத்து மாரியப்பனுக்கு கொடுத்துவிட்டு மீதி ரூ.44 லட்சத்தை திருப்பி தராமல் மோசடி செய்து ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

பணத்தை தருமாறு மாரியப்பன் கேட்டபோது, அவரிடம் வக்கீல் நந்தகோபால் தகராறு செய்ததுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாரியப்பன் செங்குன்றம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்குப்பதிவு செய்து ரூ.44 லட்சம் மோசடி செய்த வக்கீல் நந்தகோபால் மற்றும் அவரது மனைவி சாந்தி குமாரி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story