அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நிறைவு


அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நிறைவு
x

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்தது.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்பமுள்ளோர் 17 மற்றும் 18ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், 20-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடைபெறும். 21-ந்தேதி (செவ்வாய்கிழமை) மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் 26-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் 27-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்தது.

இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேறு யாரும் பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

அதேவேளை, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 221 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம் ஆனால் முடிவை வரும் 24-ம் தேதி வரை வெளியிடக்கூடாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

அதேவேளை, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமியை வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story