ஒன்றிய குழு தலைவர் பாரபட்சம் காட்டுவதாக புகார்: தி.மு.க., காங்கிரஸ் பெண் கவுன்சிலர்கள் தர்ணா


ஒன்றிய குழு தலைவர் பாரபட்சம் காட்டுவதாக புகார்: தி.மு.க., காங்கிரஸ் பெண் கவுன்சிலர்கள் தர்ணா
x

ஒன்றிய குழு கூட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய குழு தலைவர் பாரபட்சம் காட்டுவதாக கூறி தி.மு.க., காங்கிரஸ் பெண் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளுக்கு 12 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஒன்றிய குழு தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த தங்கதனம் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று திருத்தணி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் தங்கதனம் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு வரவேற்றார், ஒன்றிய குழு துணைத் தலைவர் இ.என்.கண்டிகை ரவி முன்னிலை வகித்தார்.

ஒன்றிய குழு கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கவுன்சிலர்கள் எழுந்து, கூட்டம் முடிந்ததும் தீர்மான புத்தகத்தில் அதிகாரிகள் திருத்தங்கள் மேற்கொள்வதாகவும், ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் சரிவர பணிகளை மேற்கொள்வது கிடையாது ஆனால் மாதம் ரூ.5 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தி.மு.க.வைச் சேர்ந்த பெண் கவுன்சிலர்கள் நீலா, வள்ளியம்மா, ஜோதி, காஞ்சனா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கலைச்செல்வி ஆகியோர் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய குழு தலைவர் பாரபட்சம் காட்டுவதாக கூறி ஒன்றிய குழு தலைவர் இருக்கையின் முன்பு அமர்ந்து 5 பேரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஒவ்வொரு கூட்டத்திலும் தங்களுடைய கோரிக்கைகளை ஒன்றியகுழு தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். ஒன்றிய குழு கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story