அண்ணா நினைவு தினத்தையொட்டி: காஞ்சீபுரம், செங்கல்பட்டு கோவில்களில் பொதுவிருந்து


அண்ணா நினைவு தினத்தையொட்டி: காஞ்சீபுரம், செங்கல்பட்டு கோவில்களில் பொதுவிருந்து
x

பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தையொட்டி காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட கோவில்களில் பொதுவிருந்து நடைபெற்றன. இதில் கலெக்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.

காஞ்சிபுரம்

பேரறிஞர் அண்ணா 54-வது நினைவு தினத்தையொட்டி, காஞ்சீபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற்றது. இதில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா. ஆர்த்தி, காஞ்சீபுரம் எம்.எல்.ஏ.சி.வி.எம்.பி.ஏழிலரசன், காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் பொது விருந்தில் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.

மேலும் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு பொதுவிருந்து நடைபெற்றது இதில் சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உணவருந்தினர்கள்.

முன்னதாக பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில், அவரது திருவுருவ சிலைக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, மாவட்ட வருவாய் துறை அதிகாரி கோ.சிவருத்ரய்யா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோயிலில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற்றன. இதில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு நகராட்சி நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டு பொதுமக்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டனர்.

காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் நடந்த அமைதி பேரணியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா சிலைக்கு, காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


Next Story