ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார்


ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார்
x
தினத்தந்தி 13 Jun 2023 9:23 PM GMT (Updated: 14 Jun 2023 10:17 AM GMT)

அரசியலுக்கு புதியவர் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார். ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

தஞ்சாவூர்

அரசியலுக்கு புதியவர் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார். ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தஞ்சையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ெஜயலலிதாவின் ஆளுமை தெரியாமல்...

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு புதியவர் என்பதை அடிக்கடி அவர் நிரூபித்து வருகிறார். தமிழ்நாடு அரசியல் வரலாறு, ஜெயலலிதாவின் மாபெரும் ஆளுமை போன்றவற்றையெல்லாம் தெரியாமல், வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார்.

கடந்த 1991 முதல் 96-ம் ஆண்டு நடந்த தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா மீது 49 வழக்குகள் தொடுக்கப்பட்டன. அனைத்து வழக்குகளையும் தவிடு, பொடியாக்கி வெற்றி கண்டார்.

அறியாமையில் பேசுகிறார்

ஒரு அரசியல் தலைவர் மீது இந்திய அளவில் நடந்த சதியால்தான் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார். இது எல்லோருக்கும் தெரியும். அண்ணாமலை இருக்கக்கூடிய பா.ஜ.க. 1998-ம் ஆண்டில் தமிழ்நாட்டிலும், குறிப்பாக தென்னாட்டிலும் காலூன்றுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர் ஜெயலலிதாதான்.

வாஜ்பாய், அத்வானி, மோடி ஆகியோர் ஜெயலலிதா மீது மிகுந்த அன்புடனும், நட்புடனும் இருந்தனர். அன்னை தெரசா போன்ற சமூக சேவர்கள் கூட ஜெயலலிதாவின் திட்டங்களை பாராட்டினார்கள். பெண்கள் முன்னேற்றத்துக்காக, ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்காக எத்தனையோ திட்டங்களை அவர் செய்துள்ளார். ஜெயலலிதாவின் 30 ஆண்டுகால சாதனையைக் கண்டு அஞ்சி, காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் மீது வழக்கு போடப்பட்டது. எனவே அவரைப்பற்றி அண்ணாமலை அறியாமையில் பேசி வருகிறார். ஜெயலலிதா மரணம் அடையும் வரை யாராலும் அவரை எதுவும் செய்ய முடியவில்லை.

திரும்ப பெற வேண்டும்

செந்தில் பாலாஜி எனது பழைய நண்பர். அமைச்சராக உள்ள அவர் மீது 2 ஆண்டுகளாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அவர் மீது அமலாக்கத்துறை விசாரணை இருந்து வந்த நிலையில் இப்போது அவரது வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது.

மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் பொதுக் கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். ஏற்கெனவே உள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story