நாளை சென்னையில் பா.ஜனதா பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்ட விவரம்


நாளை சென்னையில் பா.ஜனதா பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்ட விவரம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 2 March 2024 6:35 PM GMT (Updated: 3 March 2024 6:50 AM GMT)

சென்னையில் நாளை நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்

சென்னை,

சென்னை நந்தனத்தில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இதையொட்டி அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி பிரதமர் நரேந்திர மோடி நாளை பகல் 1.15 மணிக்கு மராட்டியத்தில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, சென்னைக்கு மதியம் 2.45 மணிக்கு வருகிறார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, கல்பாக்கம் ஹெலிபேடு வருகிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்று பிற்பகல் 3.30 முதல் மாலை 4.15 மணி வரை கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு (உற்பத்தி) திட்டத்தை பார்வையிடுகிறார்.

அதை பார்வையிட்ட பின்னர் மீண்டும் கல்பாக்கம் ஹெலிபேடு சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மாலை 5 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலைய ஹெலிபேடு தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நந்தனம் பொதுக்கூட்ட திடலுக்கு மாலை 5.10 மணிக்கு வருகிறார்.

மாலை 6.15 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, மாலை 6.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக விமான நிலையம் செல்கிறார். மாலை 6.35 மணிக்கு சென்னையில் இருந்து தெலுங்கானா நோக்கி விமானத்தில் அவர் புறப்பட்டு செல்கிறார். தெலுங்கானாவை இரவு 7.45 மணிக்கு சென்றடைகிறார்.


Next Story