தேர்தல் பத்திரம் ரத்து: சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு


தேர்தல் பத்திரம் ரத்து: சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு
x

தேர்தல் பத்திரம் சட்ட விரோதமானது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது சரியானதே என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

கடந்த 2018 ஜனவரி 2ம் தேதி மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை கொண்டுவந்தது. இந்த திட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பவர்கள் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்று ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ. 1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும். தனி நபர்கள் நிறுவனங்கள் என தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும்.

ஒரு நபர் அல்லது நிறுவனம் சார்பில் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். தேர்தல் பத்திரங்களை வாங்கும் தனி நபர், நிறுவனங்கள் யார் என்ற விவரங்கள் பொதுமக்களுக்கோ அல்லது நன்கொடையை பெறும் அரசியல் கட்சிக்கு அளிக்கப்படாது. எனினும், அரசு மற்றும் வங்கி சார்பில் இந்த விவரங்களை சேகரித்துக் கொள்ளலாம்.

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்டவிரோதமானது எனக் கூறி அதனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அந்த வகையில், தி.மு.க தலைவரும் தமிழக முதல் அமைச்சருமான மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது சரியானதுதான். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தேர்தலில் நேர்மையை உறுதி செய்யும். அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயகம், சமநிலையை மீட்டெடுத்துள்ளது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு" என்றார்.


Next Story