அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்


அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 30 Sep 2023 8:53 AM GMT (Updated: 30 Sep 2023 9:32 AM GMT)

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை,

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 13-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கு தொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 3 வழக்குகளிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story