கூட்டுறவு சங்க காலி பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை


கூட்டுறவு சங்க காலி பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Nov 2023 11:36 AM GMT (Updated: 28 Nov 2023 12:31 PM GMT)

கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்தேர்வு மையங்களை கலைக்க ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் 2257 காலி பணியிடங்கள் உள்ளன. இதனை நிரப்ப கூட்டுறவுத்துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதன் மூலம் கூட்டுறவு துறை மூலமாகவே ஆட்கள் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 2257 உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் கூட்டுறவுத்துறை மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசுத்துறை, பொதுத்துறை பணியாளர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்த பிறகும் கூட்டுறவுத்துறை தனியாக ஆள்தேர்வு நடத்துவது நியாயமற்றது. கூட்டுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆள்தேர்வு அறிவிக்கையை திரும்பப் பெற்று அந்தப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்தேர்வு மையங்களை கலைக்கவும் ஆணையிட வேண்டும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story