ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்திய கட்டிட தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை - வாலிபர் சிக்கினார்


ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்திய கட்டிட தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை - வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 28 Jun 2023 7:55 AM GMT (Updated: 28 Jun 2023 10:03 AM GMT)

வேளச்சேரியில் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து கட்டாயப்படுத்தியதால் கட்டிட தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

சென்னை

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 45). இவர் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழே தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அவினாஷ் (22) என்பவர் கடந்த ஒரு வாரமாக தங்கி கட்டிட வேலை பார்த்து வந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவினாஷ் வேளச்சேரி-தரமணி லிங்க் ரோடு அருகே கத்தியுடன் நின்று கொண்டு நான் கொலை செய்து விட்டேன் என கூச்சலிட்டு உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தந்தனர்.

உடனே வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது, தன்னுடன் தங்கி இருந்த கொளஞ்சி என்ற வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.

பின்னர், மேம்பாலத்தின் கீழ் கொலை செய்யப்பட்டு கிடந்த கொளஞ்சி உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொளஞ்சியை கொலை செய்த அவினாஷை கைது செய்து மேலும், விசாரணை நடத்தினர். அதில், மதுபோதையில் இருந்த கொளஞ்சி தன்னிடம் வந்து ஓரினச் சேர்க்கைக்கு அழைத்ததாகவும், இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, என்னை ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதால், ஆத்திரத்தில் காய்கறி வெட்டும் கத்தியால் கொளஞ்சியை குத்திக்கொலை செய்ததாக அவர் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவினாஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story