நீடிக்கும் கனமழை... சென்னையில் 20 விமானங்கள் ரத்து..!


நீடிக்கும் கனமழை... சென்னையில் 20 விமானங்கள் ரத்து..!
x

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது.

அபுதாபி, துபாய், கொழும்பு, டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வந்த 8 விமானங்கள், மழை மற்றும் காற்றால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தன. பின்னர் அந்த விமானங்கள் அனைத்தும் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன. சென்னையில் வானிலை சீரான பிறகு விமானங்கள் மீண்டும் சென்னை வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னையில் இருந்து துபாய், கொச்சி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லக்கூடிய 10 விமானங்கள் மற்றும் அந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 10 விமானங்கள் என மொத்தம் 20 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது.


Next Story