கே.சி.பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு உத்தரவு


கே.சி.பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கட்சியில் இருந்து கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை,

அ.தி.மு.க.வின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தன்னை பற்றி தெரிவித்த கருத்துகள் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கே.சி.பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே, கே.சி.பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுகவில் இருந்து கே.சி.பழனிசாமியை நீக்கி பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.


Next Story