சமூகநீதி பற்றி பேச தி.மு.க.வுக்கு உரிமை இல்லை - வானதி சீனிவாசன்


சமூகநீதி பற்றி பேச தி.மு.க.வுக்கு உரிமை இல்லை - வானதி சீனிவாசன்
x
தினத்தந்தி 7 April 2024 7:24 AM GMT (Updated: 7 April 2024 7:36 AM GMT)

பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் மோடி என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் ஏப்ரல் 6-ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், "தமிழகத்தின் 38 மாவட்டங்களில், 16 மாவட்ட ஆட்சியர்கள் பெண்கள். 10க்கும் அதிகமான அரசு துறைகளில் செயலாளர்கள் பெண்கள். உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் முதலான பதவிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். ஆசிரியர்கள், மருத்துவர்கள், நீதிபதிகளில் ஆண்களுக்கு சமமாக பெண்கள். இதற்கெல்லாம் தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடுகளே காரணம்.

மத்திய பா.ஜ.க. ஆட்சியில் மத்திய அரசின் கேபினட் அமைச்சகத்தில் 3 சதவீத அளவுக்கு பிற்படுத்தப்பட்டோர் உள்ளனர். இனியும் பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்தால் மத்தியில் மட்டுமல்ல, மாநில அரசுகளில் கூட இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாத நிலை ஏற்படும். பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்தால் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே ஆட்சி என்ற அவலநிலைதான் உருவாகும்" என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி நெருங்க, நெருங்க தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்பது இந்த அறிக்கையில் தெரிகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பட்டியலினத்தவர் 12 பேர், பழங்குடியினர் 8 பேர், பிற்படுத்தப்பட்டோர் 27 பேர், பெண்கள் 11 பேர் உள்ளனர். சுதந்திர இந்தியாவின் 77 ஆண்டுகால வரலாற்றில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பெண்கள் அதிகம் இருக்கும் மத்திய அமைச்சரவை பிரதமர் மோடியின் அமைச்சரவைதான்.

ஆனால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 பேர் கொண்ட தி.மு.க. அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகிய இருவர் மட்டுமே பெண்கள். அமைச்சரவையில் 34-வது இடம் அதாவது கடைசி இடம் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் கயல் விழிக்குதான். இதுதான் பெண்கள் வரலாற்றில் இமலாயப் புரட்சியா?. ஆனால், 140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவின் நிதி மந்திரியாக பெண்ணை நியமித்திருக்கிறார் பிரதமர் மோடி. இதுதான் பெண்கள் வரலாற்றில் புரட்சி. இதுதான் உண்மையான சமூக நீதி.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்குவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., இப்போது சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு உரிமைத் தொகை வழங்கவில்லை. இதுதான் பெண்கள் வரலாற்றில் இமாலயப் புரட்சியா?. பா.ஜ.க. இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சி என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த கடந்த அரை நூற்றாண்டாக முயற்சி நடக்கிறது.

பெண்கள் பல சவால்களை சந்தித்து படித்து தனது திறமையால் ஆசிரியர்களாக, மருத்துவர்களாக, நீதிபதிகளாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வந்தால் அதற்கு தி.மு.க. உரிமை கொண்டாடுவது பெண்களை அவமதிக்கும் செயல். வாரிசு அரசியலில்கூட பெண்களை புறக்கணிப்பதுதான் திராவிட மாடல்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உண்மையிலேயே பெண்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற அக்கறை இருந்தால், அவரது அமைச்சரவையில் குறைந்தது 10 பெண்களையாவது நியமிக்க வேண்டும். பெண்கள், தங்களுக்கு தேவையானதை அவர்களே செய்து கொள்ள அரசியல் அதிகாரத்தை வழங்க வேண்டும்.

அவர்களை வாங்கும் இடத்திலேயே வைத்திருக்காமல் கொடுக்கும் இடத்திற்கு கொண்டுவர வேண்டும். அதுதான் பெண்கள் வரலாற்றில் உண்மையான புரட்சியாக இருக்க முடியும். அதைத்தான் பிரதமர் மோடி செய்துள்ளார். மோடியின் அடுத்த ஆட்சியில் பெண்கள் இன்னும் முக்கியப் பதவிகளில் இருப்பார்கள். திமுகவின் ஏமாற்று வேலைகளைக் கண்டு தமிழக பெண்கள் ஏமாற மாட்டார்கள். இந்தத் தேர்தலில் தமிழக பெண்களின் ஓட்டு பிரதமர் மோடிக்கே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story