பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. வெற்றி பெற்றது - எடப்பாடி பழனிசாமி


பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. வெற்றி பெற்றது -  எடப்பாடி பழனிசாமி
x

தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது, கடந்த 20 மாதங்களில் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள் என்று முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி பேசினார்.

அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுகம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அறிமுக பொதுக்கூட்டம் ஈரோடு பெருந்துறை ரோடு வேப்பம்பாளையம் பகுதியில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் முடிந்து விட்டன. இந்த காலத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்காக ஒரு துரும்பையாவது கிள்ளி போட்டு இருக்கிறாரா? ஆனால், ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து இருக்கிறது. கட்டப்பஞ்சாயத்து, போதை பொருள் விற்பனை இதுதான் அதிகரித்து இருக்கிறது.

நமதுவெற்றி

இங்கே 20 அமைச்சர்கள் வந்து ஓட்டு சேகரிக்கிறார்கள். போட்டியிடுவது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி. அவர்களுக்காக தி.மு.க. அமைச்சர்கள் ஓட்டு கேட்கிறார்கள் என்றால், அவர்களுக்கு பயம் வந்து விட்டது. இந்த பயம்தான் நமது வெற்றி. தி.மு.க. ஆட்சியில் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு மணிமண்டபம் கட்டுகிறார்கள். அவர் பெயரில் மதுரையில் பெரிய நூலகம் கட்டுகிறார்கள். எழுதாத பேனாவுக்கு சிலை வைக்கிறார்கள். மறைந்த தலைவர் பற்றி பேசக்கூடாது.

பேனா வைக்கட்டும், வேண்டாம் என்று சொல்லவில்லை. அதை கடலில்தான் வைக்க வேண்டுமா?. அவரது நினைவு இல்லத்தில் ரூ.2 கோடி அளவில் வைக்கட்டுமே. மீதி தொகையை மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவிடலாமே. மக்களின் பணத்தை எடுத்து குடும்பத்துக்காக செலவிடலாமா?, இது நியாயமா...? உங்கள் வரிப்பணம் வீணாக போகவேண்டுமா?.

சொல்ல முடியுமா?

தி.மு.க.வின் 21 மாத ஆட்சியில் ஏதேனும் ஒரு புதிய திட்டம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது என்று தில் இருந்தால் உங்களால் சொல்ல முடியுமா?. மகனின் சினிமா பற்றி அமைச்சருடன் விவாதிக்கும் முதல்-அமைச்சரால் மக்களுக்கு நன்மை தர முடியுமா?.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கே.எஸ்.தென்னரசுக்கு வெற்றி அளிப்பதன் மூலம் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக இருக்கும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் அனைத்து திரைப்படங்களையும் அடிமாட்டு விலைக்கு வாங்கி அவர்களே ரிலீஸ் செய்கிறார்கள். இவர்களின் தலையீட்டால் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 150 படங்கள் திரையிட முடியாமல் முடங்கிக்கிடக்கிறது.

சொத்துவரி

மின்கட்டணம் உயர்ந்து விட்டது. விலைவாசி விண்ணை முட்டுகிறது. மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக் அடிக்கும். இப்போது மின்சாரம் என்று சொன்னாலே ஷாக் அடிக்கிறது. இதனால் தொழில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. சொத்து வரியை உயர்த்தமாட்டோம் என்று வாக்குறுதி அளித்த ஸ்டாலின் சொத்து வரியை உயர்த்தி விட்டார். குடிநீர் கட்டணம் உயர்ந்து விட்டது. ஒரு குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் மாத செலவு ஆகி வந்த நிலையில், இப்போது ரூ.7 ஆயிரத்து 500 செலவாகிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன் பெற்று விட்டது என்று நமது ஆட்சியை விமர்சனம் செய்தார். ஆனால் இந்த 2 ஆண்டு ஆட்சியில் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். கடன் வாங்கினார்களே, மக்களுக்காக ஏதேனும் செய்து இருக்கிறார்களா?. விவசாயிகளுக்கு கொடுத்தார்களா?. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கொடுத்தாரா?. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வேன் என்றார் செய்தாரா, எல்லாம் ஏமாற்று வாக்குறுதிகள். தேர்தலின் போது 520 அறிவிப்புகள் வெளியிட்டார். அதில் 85 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார். அனைத்தும் பச்சை பொய். குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1000 கொடுத்தாரா?. 21 மாதங்களில் ரூ.21 ஆயிரம் கிடைத்ததா?, கியாசுக்கு மாதம் ரூ.100 மானியம் தருவதாக கூறினார். கிடைத்ததா?. முதியோர் உதவித்தொகை வழங்க 110 விதியின் கீழ் 5 லட்சம் பேருக்கு உத்தரவு பிறப்பித்து வழங்கினேன். இப்போது 7 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகையை நிறுத்தி இருக்கிறார்கள். இதுதான் அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் உள்ள வேறுபாடு. ஏழை மக்களுக்கு உதவி செய்யும் ஒரே கட்சி அ.தி.மு.க.

பொய் வாக்குறுதி

அ.தி.மு.க. ஆட்சியில் அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள் மருத்துவர் ஆக வேண்டும் என்று 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டை என் சிந்தனையால் கொண்டு வந்தேன். இந்த ஆண்டு 564 மாணவ-மாணவிகள் மருத்துவம் படிக்கிறார்கள்.

தி.மு.க. பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். மக்களை ஏமாற்றிய அவர்களுக்கு பாடம் புகட்ட தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பல்லாயிரக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது என்று உணர்த்துங்கள்.

இவ்வாறு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முன்னதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ஜனதா தேசிய செயலாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் பெ.ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, விவசாய சங்கத்தை சேர்ந்த பெரியசாமி, மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் சி.சரஸ்வதி, அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.பொன்னையன், கே.சி.கருப்பணன் மற்றும் கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகள் பேசினார்கள்.


Next Story