திமுக எம்.பி. உட்பட 15 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்


திமுக எம்.பி. உட்பட 15 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
x

கோப்புப்படம்

15 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற மக்களவைக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த வாலிபர்கள், வண்ணப் புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாளில் அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பாதுகாப்பு பணியாளர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஜனநாயக கோவிலாக கருதப்படும் நாடாளுமன்றத்திற்குள் நடந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மேலும் நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், உள்துறை மந்திரி அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து ஏற்பட்ட கடும் அமளி காரணமாக மக்களவையில் இருந்து திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேரும், மாநிலங்களவையில் இருந்து ஒருவரும் என மொத்தம் 15 எம்.பி.க்கள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதிலும் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "திமுக எம்பி கனிமொழி உட்பட 15 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயக விரோதமானது மற்றும் பாராளுமன்ற ஜனநாயகத்தின் உணர்வைக் குழிதோண்டிப் புதைக்கிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

எம்.பி.க்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது நமது நாடாளுமன்றத்தில் புதிய விதிமுறையா? நமது ஜனநாயகக் கோவிலில் ஒரு பெரிய பாதுகாப்பு மீறலுக்கு பதில் தேடும் மக்கள் பிரதிநிதிகள் ஏன் தண்டிக்கப்படுகிறார்கள்?

15 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பாராளுமன்றம் விவாத மேடையாக இருக்க வேண்டுமே தவிர எதிர்கட்சிகளை வாயடைக்க வைக்கக் கூடாது" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.




Next Story