தி.மு.க. - மக்கள் நீதி மய்யம் கூட்டணி இறுதியாகாதது ஏன்?


தி.மு.க. - மக்கள் நீதி மய்யம் கூட்டணி இறுதியாகாதது ஏன்?
x

தி.மு.க. கூட்டணியில் ம.நீ.ம-விற்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முன் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலை சந்திக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் திட்டமிட்டு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை முடித்து, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.

இந்தநிலையில், கடந்த தேர்தல்களில் 7.35% முதல் 9.62% வரை வாக்குகள் பெற்றுள்ளதாக கூறி 2 தொகுதிகளை ம.நீ.ம கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் நீதி மய்யத்திற்கு குறைந்தது 2 தொகுதிகள் வேண்டும் எனவும் தி.மு.க. கூட்டணியில் ம.நீ.ம-விற்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முன் வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மறைமுக பேச்சுவார்த்தையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைவதில் சுமுக உடன்பாடு எட்டப்படும் என கூறப்படுகிறது.

வரும் 29-ம் தேதி கமல்ஹாசன் 'தக் லைப்' படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு செல்கிறார். படப்பிடிப்பு முடிந்து மார்ச் 10-ம் தேதிதான் மீண்டும் சென்னை திரும்ப உள்ளார். அதனால் நாளைக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்து விட்டு வெளிநாடு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story