'திராவிட மாடல் தோல்வி, பா.ம.க. மாடல் வளர்ச்சி' - டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி


திராவிட மாடல் தோல்வி, பா.ம.க. மாடல் வளர்ச்சி - டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
x

திராவிட மாடல் தோல்வி அடைந்ததாகவும், பா.ம.க. மாடல் வளர்ச்சியை மையப்படுத்துவதாகவும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

செங்கல்பட்டு

பா.ம.க. தலைவராக பதவியேற்ற டாக்டர் அன்புமணி ராமதாஸ் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்தநிலையில் அவர், நேற்று செங்கல்பட்டு மாவட்டம் சென்றார்.

கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாமல்லபுரம் மற்றும் தேவனரி பகுதியில் 81 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர், மாமல்லபுரம் நுழைவு வாயில் அருகே அமைந்துள்ள மாமல்லன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

செங்கல்பட்டில் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் செயல்படாமல் இருக்கும் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து விதமான, தடுப்பூசிகளும் தயாரிக்க முடியும். உடனடியாக இதை பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்பாக்கம் அணு கதிர்கள் தாக்குதலால் பல கிராமங்கள் பாதிப்படைந்துள்ளது. புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலக்கேடுகள் வந்து கொண்டிருக்கிறது. பழைய அணு உலை வைத்து இயங்கி வருகிறது, இதனால் சுற்றியிருக்கும் கிராமங்களில் வீடுகளை கட்ட முடியவில்லை, நிலங்களை விற்க முடியவில்லை. திருமணங்கள் கூட நடத்த முடியவில்லை. கல்பாக்கத்தில் எக்காரணம் கொண்டும் இந்தியை திணிக்கக்கூடாது. உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

செங்கல்பட்டில் ராக்கிங் கொடுமையால் உயிரிழந்த மாணவி குறித்து முறையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

திராவிட மாடல் தோல்வியில் முடிந்துள்ளது. ஆனால் பா.ம.க. முன்வைக்கும் அனைத்து மாடல்களும் தமிழகத்தின் வளர்ச்சியை மையப்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பா.ம.க. வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாநில இளைஞர் அணி செயலாளர் பொன்.கங்காதரன், திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பி.வி.கே.வாசு, காட்டாங்குளத்தூர் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் இளந்தோப்பு ஏ.வாசு, ஒன்றிய நிர்வாகிகள் ஜி.எம்.முருகேசன், கதிரவன், அண்ணாமலை, எம்.பி.தயாளன், அரசியல் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story