மின்வாரிய என்ஜினீயர் வீட்டில் 71 பவுன் தங்க நகை கொள்ளை


மின்வாரிய என்ஜினீயர் வீட்டில் 71 பவுன் தங்க நகை கொள்ளை
x
தினத்தந்தி 14 Oct 2023 8:00 PM GMT (Updated: 14 Oct 2023 8:01 PM GMT)

பெரியநாயக்கன்பாளையத்தில், மின்வாரிய என்ஜினீயர் வீட்டில் திறந்து கிடந்த மாடி வழியாக புகுந்த மர்ம ஆசாமிகள், 71 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர்.

கோயம்புத்தூர்
பெ.நா.பாளையம்


பெரியநாயக்கன்பாளையத்தில், மின்வாரிய என்ஜினீயர் வீட்டில் திறந்து கிடந்த மாடி வழியாக புகுந்த மர்ம ஆசாமிகள், 71 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர்.


மின்வாரிய என்ஜினீயர்


கோவை பெரியநாயக்கன்பாளையம் நரசிம்மநாயக் கன்பாளை யம் - பூச்சியூர் ரோடு கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 32). என்ஜினீயர். இவர், துடியலூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.


இவர், தனது தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்க தங்க மோதிரம் வாங்கி வீட்டின் பூஜையறையில் வைத்திருந்தார். இந்தநிலையில் சுரேந்திரன், வீட்டின் மாடியில் நடைபயிற்சி செய்து விட்டு அங்கிருந்த கதவை பூட்டாமல் பணிக்கு சென்று விட்டார். அதன்பிறகு அவரது குடும்பத்தினர் கீழ் வீட்டின் கதவை பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டனர்.


71 பவுன் நகை கொள்ளை


அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது பூஜை அறையில் வைத்து இருந்த தங்க மோதிரத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ கதவு உடைக்கப்பட்டு இருந்தது.


அதில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க சங்கிலிகள், வளையல் கள் நெக்லஸ், பிரேஸ்லெட் மற்றும் மோதிரங்கள் உள்பட 71 பவுன் தங்க நகைகளை காண வில்லை. அதை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.28 லட்சம் ஆகும்.


திறந்து கிடந்த மாடி கதவு


இது குறித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீ சார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். இதில் வீட்டின் மாடி கதவு திறந்து கிடந்ததால், கொள்ளையர்கள் மாடிக்கு சென்று அங்கிருந்து வீட்டுக்குள் எளிதாக புகுந்து நகைகளை கொள்ளை யடித்து உள்ளனர். இதனால் வீட்டின் அமைப்பை தெரிந்த நபர்கள் நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.


இதையடுத்து வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில், கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.



Next Story