மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
x

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கடந்த ஆண்டு மே மாதம் முதல் பணிக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்ததாக கூறப்படுகிறது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கீழ்கோத்தகிரி தூனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தருமன். இவரது மனைவி சீதையம்மாள். இவர்களது மகன் போஜராஜன் (வயது 49). இவர் கடந்த 1994-ம் ஆண்டு முதல் காவல் துறையில் பணியாற்றி வந்தார். மேலும் பதவி உயர்வு பெற்று சப்-இன்ஸ்பெக்டராக சோலூர்மட்டம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றினார்.

இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனது பெற்றோருடன் தூனேரி கிராமத்தில் வசித்து வந்தார். மனைவியை பிரிந்த வருத்தத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த காரணத்தால் அவர், கடந்த ஆண்டு மே மாதம் முதல் பணிக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு அவரது பெற்றோர் கோத்தகிரிக்கு சென்றனர். போஜராஜன் வீட்டில் இருந்தார். அவரின் பெற்றோர் தங்களது பணியை முடித்துவிட்டு மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். அப்போது தனது மகன் போஜராஜன் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே போஜராஜன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story