அரசும், மாசு கட்டுபாட்டு வாரியமும் தூக்கத்திலிருந்து விழித்து மக்கள் நலப்பணிகளில் தீவிரப் பணியாற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி


அரசும், மாசு கட்டுபாட்டு வாரியமும் தூக்கத்திலிருந்து விழித்து மக்கள் நலப்பணிகளில் தீவிரப் பணியாற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
x

மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தங்களது பணிகளைச் செவ்வனே செய்திருந்தால் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டிருக்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

வட சென்னை, எண்ணூரில் அமைந்துள்ள கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் உரம் தயாரிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய அம்மோனியத்தை நேரடியாகக் கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லும் அம்மோனியம் குழாய் 26.12.2023 அன்று நள்ளிரவில் வெடித்துச் சிதறியதாகவும், அமோனியம் காற்றில் கலந்து பரவத் தொடங்கியதால் தொழிற்சாலைக்கு அருகே உள்ள மீனவ கிராமங்களான பெரிய குப்பம், சின்ன குப்பம், உலகநாதபுரம், சத்தியவாணி மூர்த்தி நகர், தாழங்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றில் பரவிய அம்மோனியாவை சுவாசித்தபோது அப்பகுதியில் வாழ்ந்து வந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல் உபாதைகள் ஏற்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட மீனவ மக்கள் உயிருக்கு பயந்து தங்களது உடைமைகளைக்கூட எடுத்துச் செல்லாமல், அவர்களுக்கு தங்கும் வசதி கூட செய்யப்படாத நிலையில், குளிரில் ஆங்காங்கே தங்கள் குழந்தைகளுடன் நேற்று இரவு தஞ்சம் அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மூச்சுத் திணறலாலும் மயக்கத்தினாலும் 40-க்கும் மேற்பட்ட மக்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சென்னையில் மிக்ஜம் புயல் பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்த கச்சா எண்ணெய் மழை வெள்ளத்திலும் கடலிலும் கலந்து மீனவ மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய நிகழ்வில், மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தங்களது பணிகளைச் செவ்வனே செய்திருந்தால் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டிருக்காது என்றும், மீனவ மக்கள் பாதிப்படைந்திருக்க மாட்டார்கள் என்றும் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். இனியாவது மாசு கட்டுபாட்டு அதிகாரிகள் தங்களது பணிகளை துரிதமாகவும் பொறுப்புடனும் செய்திட வலியுறுத்தியிருந்தேன்.

எனது ஆலோசனையின்படி, இந்த திமுக அரசு செயல்பட்டு, உடனடியாக மாசு கட்டுபாட்டு அதிகாரிகளை வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய அனுப்பியிருந்தால், நேற்று நள்ளிரவு கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் நடைபெற்ற அம்மோனியம் வாயு கசிவு விபத்து நடைபெற்றிருக்காது. ஆனால், எப்போதும்போல் திமுக அரசு எங்களது ஆரோக்கியமான ஆலோசனைகளை காது கொடுத்து கேட்காதது போல், மேலே குறிப்பிட்ட எனது ஆலோசனையையும் காற்றிலே பறக்கவிட்டது.

ஏறத்தாழ இதுபோன்றே 40 ஆண்டுகளுக்கு முன் போபால் பூச்சிக்கொல்லி - உரத்தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயு விபத்து போன்றதுதான் இதுவும். கடவுள் அருளால் நேற்று நள்ளிரவு விஷ வாயு வெளியேறி ஏற்பட்ட விபத்தில், உயிர்பலிகள் இல்லாமல் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இனியாவது திமுக அரசும், மாசு கட்டுபாட்டு வாரியமும் கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து மக்கள் நலப்பணிகளில் தீவிரப் பணியாற்ற வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story