ஜி.எஸ்.டி வரி அல்ல…வழிப்பறி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்


ஜி.எஸ்.டி வரி அல்ல…வழிப்பறி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 15 April 2024 8:10 AM GMT (Updated: 15 April 2024 8:14 AM GMT)

ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்திற்கு போதிய நிதி பகிர்வு அளிக்காமல் மத்திய அரசு பாராமுகம் காட்டுவதாக தமிழகத்தில் ஆளும் தி.மு.க விமர்சித்து வருகிறது. முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினும் தனது தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், தனது எக்ஸ் தளத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக கூறியதாவது:

"தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்" என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், "ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்'' என்று 'ஒரே நாடு ஒரே வரி' கொண்டு வந்தார். ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்-இல் உள்ள ஜி.எஸ்.டி-யைப் பார்த்து புலம்புகின்றனர்! அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜி.எஸ்.டி கட்ட வேண்டுமா? 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள். ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story