மனைவியை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு கணவர் தூக்குப்போட்டு தற்கொலை: நாமக்கல்லில் பரபரப்பு


மனைவியை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு கணவர் தூக்குப்போட்டு தற்கொலை: நாமக்கல்லில் பரபரப்பு
x

கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் உள்ள கொங்கு நகரை சேர்ந்தவர் மனோகரன் (வயது 54). என்ஜினீயர். இவருக்கு அனிதா (47) என்ற மனைவியும், ராகுல் (24) என்ற மகனும் இருந்தனர். ஓமன் நாட்டில் பணியாற்றி வந்த என்ஜினீயர் மனோகரன், கடந்த 11-ந் தேதி நாமக்கல் வந்துள்ளார்.

பின்னர் சந்தைப்பேட்டை புதூரில் உள்ள அவரது பழைய வீட்டை புதுப்பிக்க மனோகரன் நடவடிக்கை மேற்கொண்டது தொடர்பாகவும், மகனை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவும் அவருக்கும், அனிதாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவிலும் அவர்கள் தகராறில் ஈடுபட்டதால் மகன் ராகுல் சந்தைப்பேட்டை புதூரில் உள்ள வீட்டிற்கு தூங்க சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று காலை ராகுல் கொங்குநகர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அனிதா கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலையான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். மேலும் மற்றொரு அறையில் என்ஜினீயர் மனோகரன் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல், நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் 2 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story