மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவன் சாவு - ஒரே குழியில் உடல்கள் அடக்கம்


மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவன் சாவு - ஒரே குழியில் உடல்கள் அடக்கம்
x

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 60). விவசாயி. இவரது மனைவி ஜோதி (55). கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ஜோதி இறந்து விட்டார்.

அவரது உடல் நேற்று காலை பூங்குளம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது உடலை பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர். இந்த நிலையில் மனைவி உடலை பார்த்து கதறிய ராஜா திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றபோது ராஜா இறந்துபோனது தெரியவந்தது.

இறந்த தம்பதிக்கு சேகர், வெங்கடேசன் என்ற 2 மகன்களும், வானதி என்ற மகளும் உள்ளனர். இறந்த கணவன்-மனைவி உடலுக்கு கோ.செந்தில் குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கோவி. சம்பத்குமார், பி.மகேந்திரன், பூங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலி தினகரன் உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து தம்பதியின் உடல்கள் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டன.

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story