கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு


கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
x

திருவொற்றியூரில் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் மனமுடைந்த இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் ராமசாமி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சிவராஜ் (வயது38). லாரி டிரைவர். இவருடைய மனைவி கவுதமி (36) இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிவராஜுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி கவுதமிக்கு தெரியவரவே இது தொடர்பாக கணவர் சிவராஜுவிடம் கேட்டுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனமுடைந்த கவுதமி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடம்பில் ஊற்றிக் கொண்டு தனக்கு தானே தீ வைத்து கொண்டார்.

மனைவி உடலில் தீ கொழுந்து விட்டு எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்த சிவராஜ் தீயை அணைத்து அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அதற்குள் கவுதமியின் உடம்பு முழுவதும் தீப்பரவியதில் அவர் பலத்த தீக்காயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுகாயமடைந்த கவுதமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு சிகிக்சை பலனின்றி கவுதமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மனைவியை காப்பாற்ற முயன்ற சிவராஜுவுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த போது, கவுதமி போலீசில் மரண வாக்குமூலம் அளித்தார். அதில் தனது சாவுக்கு கணவர் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story