மது பழக்கத்தை கைவிடாத கணவர்: மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்த கர்ப்பிணி


மது பழக்கத்தை கைவிடாத கணவர்: மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்த கர்ப்பிணி
x

மது குடிக்கும் பழக்கத்தை கைவிடுமாறு மனைவி கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் அருகே உள்ள கீரிப்பாறை லேபர் காலனியை சேர்ந்தவர் அபிஜித் (வயது33). இவர் அரசு ரப்பர் தொழில்கூடத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், ரஞ்சிதா (25) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரஞ்சிதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து அவருக்கு உறவினர்கள் வளைகாப்பு நடத்தி பிரசவத்துக்காக புதுநகரில் உள்ள தாய் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அபிஜித், மனைவியை பார்ப்பதற்காக அவரது தாய் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் மது போதையில் சென்றதாக தெரிகிறது. இதை பார்த்த ரஞ்சிதா கணவரிடம் மது குடிக்கும் பழக்கத்தை கைவிடுமாறு கூறினார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ரஞ்சிதா வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தன்மீது ஊற்றி தீ பற்ற வைத்தார். உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அலறி துடித்தார். இதைபார்த்த கணவர் அவரை காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து கணவன்-மனைவி இருவரையும் மீட்டனர். பின்னர் இருவரையும் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story