மோதல்... முற்றுகை... ரத்தகாயம்...! ஒற்றை தலைமை விவகாரத்தில் போர்க்களமான அ.தி.மு.க அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
Live Updates
- 18 Jun 2022 4:05 PM GMT
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உடன் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சந்திப்பு : இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு ஓ.பன்னீர் செல்வத்தை தமிழ்மகன் உசேன் சந்தித்து பேசினார்.
- 18 Jun 2022 3:08 PM GMT
பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட உள்ள தீர்மானம் இறுதி செய்யப்படவில்லை என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான வளர்மதி தெரிவித்தார். மேலும், பொதுச் செயலாளர்' என்ற கோஷத்தை விளம்பரத்திற்காக எழுப்புகின்றனர் எனவும் வளர்மதி கூறினார்.
- 18 Jun 2022 2:13 PM GMT
அதிமுகவில் ஒற்றத்தலைமை கோஷம் வலுத்துள்ள நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் மாறி மாறி மூத்த தலைவர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு வந்த செங்கோட்டையனிடம், அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு 'நோ கமெண்ட்ஸ்' என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்து விட்டுச்சென்றார்.
- 18 Jun 2022 12:57 PM GMT
இபிஎஸ்- ஓபிஎஸ் உடன் அடுத்தடுத்து செங்கோட்டையன் சந்திப்பு
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புக்கு பிறகு உடனடியாக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு முடிந்ததும் மீண்டும் எடப்பாடி பழனிசாமியை செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
- 18 Jun 2022 12:21 PM GMT
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்து பேசினார்.
- 18 Jun 2022 9:50 AM GMT
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எச்சரிக்கை
தனது ஆதரவாளர்களுக்கு 11 அம்சங்களை உள்ளடக்கி கடிதம் ஒன்றை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எழுதி உள்ளது.
ஒற்றைத் தலைமைக்காக கட்சி விதிகள் திருத்தப்பட்டால் சட்டப் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் எனவும், தற்போதுள்ள இரட்டை தலைமை பதவிக்காலம் முடிவதற்குள் மாற்றம் செய்தால் தேர்தல் ஆணையத்திலும் பிரச்னையை சந்திக்க நேரிடும்.ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம் என அதில் கூறப்பட்டு உள்ளது.
- 18 Jun 2022 9:01 AM GMT
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தீர்மான குழு கூட்டம் நிறைவடைந்த நிலையில் சென்னை, கிரீன்வேஸ் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி உடன் ஜெயக்குமார், சிவி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சந்தித்து பேசினர்.