காதலியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற காதலன் - தஞ்சாவூரில் பயங்கரம்


காதலியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற காதலன் - தஞ்சாவூரில் பயங்கரம்
x

கொலை தொடர்பாக தப்பியோடிய காளீஸ்வரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த பொன்னாங்கண்ணிக்காடு ஆனந்தவல்லி வாய்க்கால் தென்கரை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 51), இவரது மனைவி தனலெட்சுமி என்கிற கோவிந்தம்மாள்(40), இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அம்மு என்ற சிவஜோதி(19) என்ற மகளும் இருந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட புனல்வாசல் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன்(23). இவர், பேராவூரணியில் குடும்பத்துடன் தங்கி பேராவூரணி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராகவும், லாரி டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் காளீஸ்வரனு ம், சிவஜோதியும் காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் காளீஸ்வரன், அடிக்கடி சிவஜோதி வீட்டிற்கு சகஜமாக சென்று வந்ததாக தெரிகிறது கடந்த ஓராண்டுக்கு முன்பு பேராவூரணியை விட்டு காளீஸ்வரன் தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். இதனால் காளீஸ்வரனும், சிவஜோதியும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காளீஸ்வரனுக்கு சொந்த ஊரில் பெற்றோர் வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். தனது காதலனுக்கு திருமணம் ஆன தகவல் தெரிந்ததால் சிவஜோதி மிகுந்த வேதனை அடைந்தார். இது தொடர்பாக செல்போன் மூலம் அவர் காளீஸ்வரனிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பேராவூரணி வந்த காளீஸ்வரன், குடிபோதையில் சிவஜோதி வீட்டுக்கு சென்று சிவஜோதியுடன் தகராறு செய்து உள்ளார். தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு அவர் சிவஜோதியை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு திருமணம் ஆன உன்னுடன் வரமாட்டேன் என சிவஜோதி மறுப்பு தெரிவித்துள்ளார். இருவருக்கு இடையே நடந்த தகராறு குறித்து சிவஜோதியின் பெற்றோர் பேராவூரணி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், காளீஸ்வரன் குடிபோதையில் இருந்த காரணத்தால் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லாமல் அவரை கண்டித்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பின்னர் சிவஜோதி மற்றும் அவரது சகோதரர்கள், பெற்றோர் வீட்டில் படுத்து தூங்கினர். அதிகாலை வீட்டின் கதவை தட்டி உள்ளே நுழைந்த காளீஸ்வரன், மீண்டும் சிவஜோதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் வீட்டு கதவின் பின்புறம் இருந்த முண்டுக்கல்லை எடுத்து சிவஜோதியின் தலையில் காளீஸ்வரன் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சிவஜோதி துடி, துடித்து இறந்தார். அதைப்பார்த்த காளீஸ்வரன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து பேராவூரணி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர், சிவஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை நடந்த இடத்திற்கு வந்த தடய அறிவியல் துறையினர் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. இந்த கொலை தொடர்பாக பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய காளீஸ்வரனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

காதலியின் தலையில் காதலன் கல்லைப்போட்டு கொன்ற சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story