தி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது..? - டி.ஆர். பாலு பதில்


தி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது..? - டி.ஆர். பாலு பதில்
x

கோப்புப்படம்

இந்த முறை இளைஞர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தி.மு.க தலைமையிடம் தெரிவிக்க உள்ளதாக டி.ஆர்.பாலு கூறினார்.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் -தி.மு.க. இடையேயான முதற்கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று நடந்து முடிந்தது.

முன்னதாக, தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழ்நாட்டின் காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தி.மு.க. சார்பில் எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு, "மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக- காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது. எல்லா கட்சிகளும் அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். நாங்களும் 40 தொகுதிகளிலும் தி.மு.க நிற்க வேண்டும் என்றுதான் விரும்புவோம்.

பேச்சுவார்த்தை என வரும்போது, நிறைய கட்சிகள் சேரும்போது எல்லோரும் ஒன்றுபட்டு போக வேண்டும். அதுதான் கூட்டணி. தி.மு.க 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு உதயநிதி வாய்ப்பு கேட்டதில் தவறில்லை. இந்த முறை இளைஞர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தி.மு.க தலைமையிடம் சொல்வேன்.

நாடாளுமன்ற கூட்டம் நடைபெற உள்ளதால் வரும் பிப்ரவரி 9-ம் தேதிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். காங்கிரஸ் கட்சி தரப்பில், எங்களிடம் விருப்ப பட்டியல் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியதால் எந்தவித பின்னடைவும் ஏற்படவில்லை. இந்தியா கூட்டணியின் வளர்ச்சிக்காக நிதிஷ்குமார் கூறிய திட்டங்கள் எதுவும் இல்லை. இந்தி பேச வேண்டும் என்ற ஒன்றை மட்டுமே நிதிஷ் குமார் முன்னிறுத்தினார். நிதிஷ்குமார் பல தடைகள் ஏற்படுத்தியும் கூட்டணியில் இருப்பதால் அமைதியாக இருந்தோம். பிரதமர் வேட்பாளராக வர வேண்டும் என நிதிஷ்குமார் தெரிவிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே நிதிஷ் குமார் பிரச்சனைதான்

தி.மு.க கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதா என்றால், தொகுதி கேட்காமல் யார் வேண்டுமானாலும் வரலாம். மக்கள் நீதி மய்யம் தி.மு.க கூட்டணியில் இணைய இருப்பதாக வந்த செய்தி குறித்து, எனக்கு தெரியவில்லை" என்று அவர் கூறினார்.


Next Story