என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து நெய்வேலியில் பா.ம.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் - அன்புமணி ராமதாஸ்


என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து நெய்வேலியில் பா.ம.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் - அன்புமணி ராமதாஸ்
x

என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து நெய்வேலியில் பா.ம.க. சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

என்.எல்.சி. நிறுவனம்

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள 23 கிராமங்களில் இருந்து 36 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அந்த நிலங்களில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரியை ஆதாரமாகக் கொண்டு தான் ஆண்டுக்கு ரூ.10,662 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனமாக என்.எல்.சி வளர்ச்சியடைந்திருக்கிறது.

ஆனால், இதற்கெல்லாம் மூலதனமான நிலங்களை வழங்கிய உள்ளூர் மக்களுக்கு போதிய இழப்பீடோ, வேலை வாய்ப்போ வழங்கப்படவில்லை.

நிலத்தடி நீரை உறிஞ்சி கடலுக்கு அனுப்புவது, மழைக் காலங்களில் வெள்ளநீரை வெளியில் தள்ளி பயிர்களை மூழ்கடிப்பது போன்ற செயல்களைத்தான் என்.எல்.சி. நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் கடலூர் மாவட்டம் முழுவதும் கடல் நீர் உட்புகத் தொடங்கி விட்டது.

வேலைவாய்ப்பு இல்லை

இதனால் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் பட்டியலிட முடியாத அளவுக்கு மிக நீளமானவை. நிலக்கரி மூலம் கடந்த 5 ஆண்டுகளில் என்.எல்.சி. சுமார் ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ள நிலையில், அதனால் கடலூர் மாவட்டத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய ரூ.447 கோடி, அதாவது 1 சதவீத தொகையை மட்டுமே என்.எல்.சி. ஒதுக்கியுள்ளது.

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. அண்மையில் நியமிக்கப்பட்ட 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதால் மண்ணின் மைந்தர்களும், நிலக்கரி சுரங்கம் அமைக்க நிலம் அளித்தவர்களும் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆர்ப்பாட்டம்

எனவே, கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் நாளை (இன்று) காலை 11 மணிக்கு பா.ம.க. சார்பில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

இந்த போராட்டத்திற்கு பா.ம.க. தலைவரான நான் தலைமையேற்கவுள்ளேன். இப்போராட்டத்தில் பா.ம.க. மற்றும் அதன் துணை அமைப்புகளின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பார்கள். என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து ஏமாந்த மக்களும், சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் இதில் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story