மாமூல் தர மறுத்ததால் ஆத்திரம்: ஓட்டலுக்குள் புகுந்து 2 பேரை தாக்கிய ரவுடி - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்


மாமூல் தர மறுத்ததால் ஆத்திரம்: ஓட்டலுக்குள் புகுந்து 2 பேரை தாக்கிய ரவுடி - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
x

சென்னை அமைந்தகரையில் மாமூல் தர மறுத்ததால் ஆத்திரத்தில் ஓட்டலுக்குள் புகுந்து 2 பேரை தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். ஓட்டலுக்குள் புகுந்து ரவுடி பாலாஜி, 2 பேரையும் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை

சென்னை அமைந்தகரை, மேத்தா நகர், ரெயில்வே காலனி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் 2 பேர் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர், அவர்கள் 2 பேரிடமும் மாமூல் கேட்டு தொந்தரவு செய்தார். அவர்கள் மாமூல் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மர்மநபர், இருவரையும் கொடூரமாக தாக்கிவிட்டு சென்றார்.

இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் ராம்குமார் கொடுத்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த ரவுடி பாலாஜிதான் இருவரையும் தாக்கியது தெரிந்தது.

ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த 2 பேரையும் ரவுடி பாலாஜி தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் ரவுடி பாலாஜியை போலீசார் கைது செய்தனர்.

ஓட்டலுக்குள் புகுந்து ரவுடி பாலாஜி, 2 பேரையும் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரவுடி பாலாஜி மாமூல் தராத இருவரையும் கையாலும், காலாலும் கொடூரமாக தாக்குவதும், இதில் ஒருவர் மயக்கம் அடைவது போன்றும் வீடியோவில் பதிவாகி உள்ளது.


Next Story