நெல்லையில் ராகுல் காந்தி பிரசாரம்: நாளை முதல் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை


நெல்லையில் ராகுல் காந்தி பிரசாரம்: நாளை முதல் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை
x

தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நாளை மறுநாள் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.

நெல்லை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நாளை மறுநாள் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். அவர் அன்றைய தினம் நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த பிரசாரத்தின் போது நெல்லை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களை சேர்ந்த நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார். மேலும் ராகுல் காந்தியுடன் இணைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதனையொட்டி நெல்லை மாநகர் முழுவதும் நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் 13-ந்தேதி காலை 6 மணி வரை 2 நாட்கள் நெல்லை மாநகர பகுதி முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story