ஏரிகளில் வேகமாக சரியும் நீர்மட்டம்.. கோடையை சமாளிக்குமா சென்னை?


ஏரிகளில் வேகமாக சரியும் நீர்மட்டம்.. கோடையை சமாளிக்குமா சென்னை?
x
தினத்தந்தி 22 April 2024 6:03 AM GMT (Updated: 22 April 2024 6:10 AM GMT)

சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

சென்னை,

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வரும் நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டை போல கடந்த வருடம் அதிக மழை பெய்தும், ஏரிகளில் நீர்மட்டம் சரிந்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.22 டி.எம்.சி ஆக இருக்கும் நிலையில், தற்போது 5 ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 7.1 டி.எம்.சி. தண்ணீரே உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 1.4 டி.எம்.சி. தண்ணீர் குறைவாகும். கோடை வெப்பத்தின் தாக்கத்தால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இதனால் வரும் காலங்களில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, "சென்னையை பொறுத்தவரை தற்போது குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. அடுத்த பருவமழை வரை தேவையான குடிநீர் இருப்பு உள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏரிகளின் நீர்மட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது." என தெரிவித்தனர்.


Next Story