புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும் - அண்ணாமலை


புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும் - அண்ணாமலை
x

மாநில அதிகாரிகள் வழங்கிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்யவே மத்திய குழுவினர் வந்தனர் என அண்ணாமலை கூறினார்.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மற்றும், 4-ந்தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான முடிச்சூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மணலி, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. தற்போது பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வெள்ளநீர் வெளியேற்றபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் ரேஷன் கடைகளில் ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை நாளை சென்னை வேளச்சேரியில் உள்ள அஷ்டலட்சுமி நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் .

இந்த நிலையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது, மத்திய அரசு கொடுத்த ரூ. 900 கோடியில் மத்தியரசின் பங்களிப்பு 75 சதவீதமாக உள்ளது. எனவே புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினர் தமிழக அரசை பாராட்டியது சம்பிரதாயமானது. இதில் மாநில அதிகாரிகள் வழங்கிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்யவே மத்திய குழுவினர் வந்தனர். எனவே மத்திய குழுவினர் கூறியதை பா.ஜ.க ஏற்றுக்கொள்ளாது, இந்த பேரிடரை கையாண்டதில் தி.மு.க அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டது, என்று கூறினார்.


Next Story