மத அரசியலா? மனித அரசியலா?: "ஒரு கை பார்த்துவிடுவோம்" - உதயநிதி ஸ்டாலின்


மத அரசியலா? மனித அரசியலா?: ஒரு கை பார்த்துவிடுவோம் - உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 23 Jan 2024 5:06 AM GMT (Updated: 23 Jan 2024 5:21 AM GMT)

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது இந்தியாவின் முழக்கமாகும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் இப்படி ஒரு மாநாடு நடந்திடவேயில்லை என்கிற வகையில், நம் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டை மாபெரும் வெற்றி மாநாடாக நடத்தி முடித்துள்ளோம். மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன் வைத்து நடைபெற்ற நம் மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த கழக நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் வருகை தந்து சிறப்பித்த லட்சோப லட்சம் இளைஞரணி தம்பிமார்கள் அனைவருக்கும் எனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டை நடத்திட பணித்ததோடு, அதற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்த கழகத் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் அன்பும், நன்றியும். இந்த மாநாட்டினை தங்கள் வீட்டு நிகழ்ச்சி என்ற உணர்வோடு ஒட்டுமொத்த சேலம் மாவட்டக் கழகத்தினரும் களத்தில் இறங்கி மாநாட்டின் வெற்றிக்காக உழைத்தார்கள்.

பொதுவாகவே, அரசியல் கட்சிகளின் மாநாடு என்றால் சிலர் திட்டமிட்டு மக்கள் மத்தியில் ஒரு விதமான எதிர்மறை எண்ணத்தை கிளப்பி விடுவார்கள். ஆனால், இந்த மாநாடு அந்த எதிர்மறை எண்ணங்களை நேர்மறையாக மாற்றி இருக்கிறது. அந்த அளவுக்கு கட்டுப்பாடு காத்து மாநாட்டின் வெற்றிக்கு ஒத்துழைத்த இளைஞர் அணியின் தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

திராவிட இயக்க மாநாடுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தான் நாட்டின் எதிர்காலச் சட்டங்கள் என்பார்கள். அந்த வகையில் நமது மாநாட்டுத் தீர்மானங்கள் அத்தனையும் ஆதிக்கத்தையும் பாசிஸ்ட்டுகளையும் குறிவைத்து தாக்கும் கொள்கை ஏவுகணைகள்.

அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்கள் அத்தனையும் கரவொலி எழுப்பி நிறைவேற்றி தந்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய இளைஞர் அணியின் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 25 தீர்மானங்களையும், மாநிலம் முழுக்க பொதுக்கூட்டங்களின் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்கவுள்ளோம்.

நீட் ஒழிப்பு என்பது கழகத்தின் உரிமை முழக்கமாக மாறியுள்ள சூழலில், களத்திலும் இணையத்திலும் நீட் விலக்கு, நம் இலக்கு என 85 லட்சம் கையெழுத்துகளை பெற்றிருந்தோம். அவற்றில் அஞ்சல் அட்டைகளில் நாம் பெற்ற கையெழுத்துகளை மாநாட்டு மேடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கரங்களில் ஒப்படைத்தோம். அவை, ஜனாதிபதியிடம் விரைவில் வழங்கப்படவுள்ளன.

நேற்று வரை நமது மாநாடுதான் தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் மாநாடு பெற்ற பிரம்மாண்ட வெற்றியின் விளைவு, நாடாளுமன்ற தேர்தலில் நமது கழகம் பெறப்போகிற மாபெரும் வெற்றி எல்லோரின் எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது. எனவே, மாநாடு முடிந்து விட்டது சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று இளைஞர் அணி தோழர்கள் எண்ணிவிட வேண்டாம். நாடாளுமன்ற தேர்தல் மிக அருகில் வந்துவிட்டது இதுவரை உழைத்துவிட்டு இனி ஓய்வெடுத்தால் அது முயல் ஆமை கதையாய் முடிந்து விடும். உங்களின் சுறுசுறுப்பை நீங்கள் மேலும் கூட்ட வேண்டும்.

நமது மாநாட்டின் நோக்கம் "மாநில உரிமை மீட்பு". அந்த நோக்கத்தை நாம் வென்றாக வேண்டுமென்றும். இன்னார்க்கு இன்னது என்று சொல்லும் பாசிஸ்ட்டுகளையும் அவர்களுக்கு ஆமாம் சாமி போடும் அடிமைகளையும் தேர்தல் களத்தில் வீழ்த்திடுவோம். எல்லாருக்கும் எல்லாம் எனும் திராவிட மாடல் தத்துவம் இந்தியா முழுவதும் பரவுகின்ற வகையில் அயராது உழைக்க இளைஞரணி மாநாடு எல்லோருக்கும் உத்வேகம் தந்திருக்கிறது.

மத அரசியலா -மனித அரசியலா? மனு நீதியா - சமூக நீதியா? மாநில உரிமையா? பாசிச அடக்குமுறையா? என ஒரு கைப்பார்த்துவிடுவோம். வெல்லப்போவது சமூக நீதியும் -சமத்துவமுமே என்பதை இளைஞர் அணி மாநில மாநாடு நமக்கு கோடிட்டு காட்டியிருக்கிறது.

இந்த நேரத்தில் மாநாட்டில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உரையிலிருந்து இந்த தேர்தல் நேரத்தில் நான் அடிக்கோடிட்டு காட்ட விரும்பும் கருத்துகளை கூற விரும்புகிறேன்.

நாடும் நமதே. நாற்பதும் நமதே. இந்தியாக் கூட்டணி வென்றால் கலைஞரின் முழக்கமான "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி" என்பது இந்தியாவின் முழக்கமாகும். நரேந்திர மோடி 2 முறை பிரதமராகி இருக்கிறார். அந்த இரண்டு தேர்தல்களிலும் தமிழ்நாட்டு மக்கள் அவரை ஏற்கவில்லை. இப்போது 3-ஆவது முறையும் தமிழ்நாடு அவரை ஏற்கப் போவதில்லை. இந்த வார்த்தைகள் மூலம், நமக்கு வழிகாட்டுதலையும் உற்சாகத்தையும் நமது கழகத் தலைவர் - முதல்-அமைச்சர் தந்துள்ளார்கள். முக்கியமாக கழகத்தலைவர் அவர்கள் கூறிய இன்னொரு கருத்தையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

"இந்த மாநாட்டில் கூடியிருக்கும் உங்களையெல்லாம் பார்க்கும் போது நான் லட்சம் இளைஞர்களின் சக்தியை பெறுகிறேன். இங்கே உதயநிதி மட்டுமல்ல. இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் என்னுடைய மகன்தான். திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசுதான்," என்று சொன்னார்களே, அதுதான் என்னை பொருத்தவரை நமது மாநாட்டு வெற்றியின் அளவீடு.

லட்சம் இளைஞர்களின் சக்தியை கழக தலைவர் பெற்றுவிட்டார்கள். அவரின் சக்தியை நாம் ஒவ்வொருவரும் பெறுவோம். தேர்தல் களத்தில் உழைப்போம்! மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும். பாசிஸ்டுகளுக்கு முடிவுகட்டி அடிமைகளை புறந்தள்ளி இந்தியா கூட்டணியின் வெற்றியை கழக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் கரங்களில் சேர்ப்போம்!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story