"நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடி தேவை" : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை


நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடி தேவை : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 14 Dec 2023 9:01 AM GMT (Updated: 14 Dec 2023 9:07 AM GMT)

மத்திய குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்திட தற்காலிக நிவாரணத் தொகையாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் வழங்கிட தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (14.12 2023) தலைமைச் செயலகத்தில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட கடுமையான மழைப்பொழிவின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி. திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பிற்குள்ளானது. மேலும் வரலாறு காணாத கனமழையின் காரணமாக, சாலை, பாலம், நீர்நிலை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உட்கட்டமைப்புகளுக்கும் பெரிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்-அமைச்சரது உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளின் காரணமாக, பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மிக விரைவாக இயல்பு நிலை திரும்பியது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் 5-12-2023 அன்று இந்தியப் பிரதமர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், மிக்ஜம் புயலின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கவும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், தமிழ்நாட்டிற்கு உடனடியாக ரூ.5,060 கோடி நிதியை விடுவிக்குமாறும் கோரியிருந்தார்.

அதைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் 7.12.2023 அன்று சென்னை வருகை தந்து, 'மிக்ஜம்' புயல் பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், தமிழ்நாடு முதல்-அமைச்சருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். முதல்-அமைச்சர், மிக்ஜம் புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைத் தெரிவித்து இடைக்கால நிதி உதவி கோரும் கோரிக்கை மனுவினை அளித்து, தமிழ்நாட்டிற்கு உடனடியாக நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த மத்திய அரசின் பல்துறை ஆய்வுக் குழு 12.12.2023 மற்றும் 13.12,2023 ஆகிய நாட்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பெருநகர சென்னை மாநகராட்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டது.

இன்று (14.12.2023) தமிழ்நாடு முதல்-அமைச்சரை மத்திய அரசின் பல்துறை ஆய்வுக் குழுவினர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அவ்வமயம், மிக்ஜம் புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோரும் கோரிக்கை மனுவினை (Memorandum) தமிழ்நாடு முதல்-அமைச்சர் மத்திய அரசின் ஆய்வுக் குழுவின் தலைவரிடம் வழங்கினார்.

இக்கோரிக்கை மனுவில், புயல் மழையால் சாலைகள், பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள் போன்ற பொதுக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்திடவும், மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், பழுதடைந்த துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட மின்சார உட்கட்டமைப்புகளை சீர் செய்திடவும், பாதிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் தொட்டிகள், தெருவிளக்குகள், கிராம சாலைகள் ஆகியவற்றை சீர் செய்திடவும் இழப்பீடுகள் கோரப்பட்டுள்ளது.

மேலும், மிக்ஜம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள், வலைகள் ஆகியவற்றிற்கு இழப்பீடுகள் வழங்கவும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடுசெய்திடவும், சாலையோர வியாபாரிகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிடவும், தற்காலிக நிவாரணத் தொகையாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் கோரப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பேசியதாவது,

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ள சேதங்களைப் பார்வையிட்டு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் முதற்கண் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையில் கடந்த இரண்டு நாட்கள் நீங்கள் மேற்கொண்ட ஆய்வு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த வெள்ளச் சேதத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு தேவையான எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருந்தது. அதேபோல் புயல், மழையின் தாக்கத்திற்கு பிறகு, மீட்பு நிவாரண நடவடிக்கைகளும் முழுவீச்சில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை குறிப்பிட்டு நீங்கள் தமிழக அரசிற்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தீர்கள். அதற்காக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாறு காணாத இந்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட மிகப் பெரிய சேதங்களை சரிசெய்து மீண்டும் உருவாக்கிடவும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அதனை மீண்டும் உருவாக்கி வழங்கிடவும் தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரங்கள் மட்டும் போதுமானது அல்ல. மத்திய அரசின் பங்களிப்பும் இதற்கு பெருமளவு தேவைப்படுகிறது. எனவே. மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களை மீட்க தேவையான உதவிகளை வழங்கவும் பல்வேறு வகையான சமூக உட்கட்டமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்யவும் மத்திய அரசிற்கு நீங்கள் உரிய பரிந்துரை செய்து, தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவாரணத் தொகையை பெற்றுத்தர வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மத்திய குழுவினரை கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story