செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு - சென்னை ஐகோர்ட்டு


செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு - சென்னை ஐகோர்ட்டு
x

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை ஐகோர்ட்டு நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2014-ம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. அப்போது, போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணி வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செந்தில்பாலாஜி மீது 3 குற்றவழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இதே விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது வரை அவர் புழல் சிறையில் இருந்து வருகிறார். செந்தில்பாலாஜி சிறையில் இருந்தபோதும் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார். இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன் அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே அமலாக்கத்துறை பதிந்துள்ள சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில்பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால், அமைச்சராக இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என அமலாக்கத்துறை முன்வைத்த வாதம் தற்போது செல்லாதாகிவிட்டதாக செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில் அமலாக்கத்துறை தரப்பு வாதங்கள் நாளை முன்வைக்கப்பட உள்ளது. இதையடுத்து, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story