ஸ்ரீபெரும்புதூர்-வாலாஜாபேட்டை ஆறு வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


ஸ்ரீபெரும்புதூர்-வாலாஜாபேட்டை ஆறு வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 11 Feb 2023 8:34 AM GMT (Updated: 11 Feb 2023 8:35 AM GMT)

ஒப்பந்த பிரச்சினையால் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாப்பேட்டை வரை சுமார் 70 கி.மீ. தூரத்திற்கு ஆறு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆறு வழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்த மத்திய அரசின் சாலை போக்குவரத்துறை மந்திரி நிதின் கட்கரிக்கு கடிதம் வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாப்பேட்டை வரையிலான ஆறு வழிச்சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரருக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் இடையே ஒப்பந்த பிரச்சினையால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், இந்த சாலையின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் முதல்-அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த ஆறு வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்தவும், சாலையை நல்ல நிலையில் பராமரிக்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என மத்திய மந்திரி நிதின் கட்கரியிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அதே போல் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் என உறுதியளிப்பதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.




Next Story