சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் அவதி: கவுன்சிலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்


சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் அவதி: கவுன்சிலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x

மேடவாக்கத்தில் சாலை மற்றும் தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் அவதிக்குள்ளான பொதுமக்கள், ஊராட்சி கவுன்சிலரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

சென்னையை அடுத்த மேடவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்குப்பட்டு மெயின் ரோடு உள்பட சில தெருக்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் தேங்கி உள்ளது. சாலைகளும் குண்டு குழியுமாக மாறியதால் அதில் மழைநீர் குட்டைபோல் தேங்கி கிடக்கிறது.

அந்த பகுதியில் 4 பள்ளிக்கூடங்கள் உள்ளது. எனவே குழந்தைகளை பள்ளிக்கு இருசக்கர வானங்களில் அழைத்து வரும் பெற்ேறார், தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் குண்டும் குழியுமான சாலையால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதி பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

எனவே தங்கள் பகுதியில் சாலை மற்றும் ெதருக்களில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும். வரும் காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் அந்த பகுதியில் மழைநீர் கால்வாய் மற்றும் சாலை அமைக்க கோரி அப்பகுதியில் பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் ஒன்று கூடினர்.

அப்போது அங்கு வந்த அப்பகுதி ஊராட்சி மன்ற கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தியை பெண்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ஒவ்வொரு மழைக்கும் தாங்கள் இதுபோல் அவதிப்படுவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மேடவாக்கம் ஊராட்சி சார்பில் உடனடியாக சாலை மற்றும் தெருக்களில் தேங்கிய மழைநீரை அகற்றினர். மேலும் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் கட்டிட கழிவுகளை கொட்டி செப்பனிட்டனர்.

அந்த சாலை நெடுஞ்சாலை துறைக்கு மாற்றப்பட்டு உள்ளதால் விரைவில் கால்வாய் அமைத்து சாலை போட நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story