பெண் தகராறில் பயங்கரம்: ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து கொலை


பெண் தகராறில் பயங்கரம்: ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து கொலை
x

சென்னை மயிலாப்பூரில் பெண் தகராறில் ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியின் கூட்டாளி கைது செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை,

சென்னை மயிலாப்பூர் டூமின்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 38). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர்.

பிரசன்னா பெண் ஒருவரோடு நெருக்கமாக பழகி வந்தார். இது அந்த பெண்ணின் கணவர் டோமினிக்கிற்கு தெரிந்து பிரச்சினை ஏற்பட்டது. அதையும் மீறி அவர்களது பழக்கம் நீடித்தது. தனது கணவர் வேறோரு பெண்ணுடன் பழக்கத்தில் இருப்பதை தெரிந்து பிரசன்னாவை அவருடைய மனைவியும் கண்டித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரசன்னாவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவருடைய மனைவி கோபித்துக்கொண்டு வெளியே சென்று விட்டார். பின்னர் போதை மயக்கத்தில் பிரசன்னா வீட்டில் படுத்து உறங்கினார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து, அங்கு படுத்து கிடந்த பிரசன்னாவின் கழுத்தை ஆட்டை அறுப்பது போன்று அறுத்து கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் வெளியே சென்ற பிரசன்னாவின் மனைவி வீடு திரும்பினார். தனது கணவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார். இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து மயிலாப்பூர் உதவி கமிஷனர் சகாதேவன், இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் விரைந்து வந்து விசாரித்தனர்.

பிரசன்னாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே பிரசன்னாவை கொலை செய்த கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் மெரினா உட்புற சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பிரசன்னா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சாந்தோம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (42) என்பவரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். பிரசன்னா பழக்கத்தில் இருந்த பெண்ணின் கணவரான முக்கிய குற்றவாளி டோமினிக் (35) உள்பட 3 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story