எலக்ட்ரீசியன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்


எலக்ட்ரீசியன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்
x
தினத்தந்தி 25 Sep 2023 9:22 PM GMT (Updated: 25 Sep 2023 10:01 PM GMT)

குவைத்தில் மாரடைப்பால் இறந்த எலக்ட்ரீசியன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது48). இவர் கடந்த 15 ஆண்டுகளாக குவைத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இடையில் உடல் நலக்குறைவு காரணமாக இந்தியா வந்து சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் 7 மாதத்திற்கு முன்பு குவைத்துக்கு சென்று அங்கு பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் முருகேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினரிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். கணவர் இறந்த தகவல் அறிந்தவுடன் முருகேசன் மனைவி சத்யா குழந்தைகளுடன் கதறி அழுதார். முருகேசனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகேசன் மனைவி சத்யா மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முருகேசனுக்கு பாலாஜி, ஹரிஷ் என்ற 2 மகன்களும், துர்கா தேவி என்ற மகளும் உள்ளனர். இதில் பாலாஜி மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது


Next Story