ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த வந்ததால் பரபரப்பு - போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த வந்ததால் பரபரப்பு - போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்
x

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.

சென்னை

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் என்ற அரசாணை 149-ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும், தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும் 2013-ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தினர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல கூட்டமைப்பு நிர்வாகிகளை கைது செய்ததோடு, மற்றவர்களை போலீசார் அங்கிருந்து விரட்டி அடித்தனர். திட்டமிட்டு போலீசார் தங்களை கலைத்து விரட்டிவிட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேற்று மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக டி.பி.ஐ. வளாகத்துக்கு வந்தனர். ஏற்கனவே நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால், மீண்டும் போராட்டத்துக்கு வந்தவர்களை போலீசார் அடையாளம் கண்டு ஒவ்வொருவராக கைது செய்தனர்.

இதில் பெண்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து டி.பி.ஐ. வளாகத்துக்கு வெளியே தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது


Next Story