தொழிலாளியை கத்தியால் வெட்டிய ரவுடிகள் பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்மஅடி


தொழிலாளியை கத்தியால் வெட்டிய ரவுடிகள் பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்மஅடி
x

தொழிலாளியை கத்தியால் வெட்டிய ரவுடிகளை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

சென்னை

சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 26). இவர், புதுவண்ணாரப்பேட்டை 40-வது வார்டில் கழிவுநீர் அகற்றும் லாரியில் மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர், புதுவண்ணாரப்பேட்டை அம்மனியம்மன் தோட்டம் பகுதியில் கழிவுநீர் அடைப்பை லாரி மூலம் எடுக்கும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், வினோத்திடம் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் வெட்டினர். இதில் வினோத்தின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், 2 வாலிபர்களையும் மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து 2 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ரவுடிகளான புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்த சதீஷ் (21), தண்டையார்பேட்டையை சேர்ந்த மோகன் (24) என்பது தெரிந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story