பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வரும்19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வரும்19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x
தினத்தந்தி 15 Jan 2024 3:53 AM GMT (Updated: 15 Jan 2024 7:17 AM GMT)

வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) தைப்பூசம் அன்று மாலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா, வருகிற 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், முதல் நாளன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று காப்புக்கட்டு நடக்கிறது.

இதைத்தொடர்ந்து கொடிபூஜை, வாத்திய பூஜை நடைபெற்று காலை 7.30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று பகல் 12 மணிக்கு மேல் உச்சிக்கால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவார பாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறுகிறது. தைப்பூச திருவிழாவையொட்டி தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி வீதிஉலா நடக்கிறது.

இதேபோல் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது. விழாவின் 6-ம் நாளான அடுத்த மாதம் 24-ந் தேதி (புதன்கிழமை) மாலை 7.30 மணிக்குமேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்குமேல் வெள்ளிரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது. அடுத்த நாள் 25-ந் தேதி (வியாழக்கிழமை) தைப்பூசம் அன்று அதிகாலையில் சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளல் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. 28-ந் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


Next Story