மதுபோதையில் வந்தவர்களுக்கு டிக்கெட் தர மறுப்பு - தியேட்டரை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல்..!


திருவள்ளூரில் உள்ள பிரபல தியேட்டரை மர்ம கும்பல் அடித்து நொறுக்கி ஊழியர்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

திருவள்ளூர்

திருவள்ளூர்:

திருவள்ளூர் தேரடி அருகே உள்ள தனியார் திரையரங்கம் உள்ளது. இந்த திரையரங்கில் நடிகர் கமலஹாசன் நடித்த விக்ரம் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இங்கு மது அருந்திவிட்டு வரும் நபர்களுக்கு டிக்கெட் விநியோகிப்பது இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஒரு சிலர் மது அருந்திவிட்டு வந்து டிக்கெட் கேட்டுள்ளனர்.அவர்கள் மது போதையில் தள்ளாடிக் கொண்டு வந்ததால் டிக்கெட் கொடுக்க முடியாது என தியேட்டர் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த 10 பேர் கொண்ட கும்பல் திரையரங்கில் புகுந்து பணிபுரியும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசி பலமாக தாக்கியுள்ளனர். இதனால் திரையரங்கில் கலவரம் போல் காணப்பட்டது.

இது குறித்து திரையரங்கு மேலாளர் டி.என்.அரசு திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில், திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்குப்பதிவு செய்து திரையரங்கை அடித்து நொறுக்கி தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகிறார்.

மேலும் குடும்பம், குடும்பமாக தியேட்டருக்கு படம் பார்க்க வருவதால் மது போதையில் வருபவர்களுக்கு டிக்கெட் வழங்க மறுப்பு தெரிவித்தார். தியேட்டரை அடித்து நொறுக்கியதுடன் ஊழியர்களை தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியுள்ளது.


Next Story